ஆசிரியர் அறிமுகம்: ப்ரவின்துள்சி. மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஒரு கவிஞர், ஓவியர், கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர். கீற்று மற்றும் உயிர்மை போன்ற தளங்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
உதிர்காலத்தின் இலைகள்:
நான் மிகவும் விருப்புற்று இருக்கிறேன்
உன் நினைவில் அந்நாட்கள் இருக்குமென்று.
மிக அழகான நாட்கள் அவை...ஒரு வசந்தகாலம்,
அன்றைய வெயில் இதைக்காட்டில் மிகவும் இதமாக இருந்தது.
அந்த உதிர்கால இலைகள் ஒரு மண்வாரியால் அள்ளிச்செல்லப்பட்டது
பார் இதோ! நான் எதையும் மறக்கவில்லை…!
ஆம்... அந்த உதிர்கால இலைகளை ஒரு கலப்பையால் அள்ளிச் செல்கிறார்கள்...
கூடவே நினைவுகளையும்...பின் அதன் கசப்புகளையும்...
பிறகு வடதிசைக்காற்று ஒன்று அவற்றை தூக்கிச்சென்றது
மறதிகள் மிகுந்த அந்த குளிர் இரவினூடே....
இதோ பார்...நான் எதையும் மறக்கவில்லை...
நீ எனக்காகப் பாடிய பாடலையும்!
அதோ நம்மை ஒத்திருந்த அந்தப் பாடல்...
விருப்புற்றிருந்தோம் நாம், என்மீது நீயும், உன்மீது நானும்
வாழ்ந்திருந்தோம் ஒன்றாக இணைந்திருந்தபடியே,
என்னை விரும்பிய நீயும், உன்னை விரும்பிய நானும்.
ஆனால் விருபுற்றவர்களைப் பிரிப்பதே வாழ்வின் விருப்பமாக உள்ளது!
மிக மென்மையாக...ஒரு சிறு சலனமுமின்றி
பிரிந்துசென்ற இரு காதலர்களின் பாதங்களை
கழுவி செல்கிறது கடல்
மணல் மீதிருந்து!
அந்த உதிர்கால இலைகள் ஒரு மண்வாரியால் அள்ளிச்செல்லப்பட்டது !
பின் நினைவுகளையும், அதன் கசப்புகளையும்…
ஆனால் மௌனித்திருந்த என் காதல்
வாழ்வின் கரங்களுக்கு நன்றி சொன்னபடியிருக்கும்
தீராப் புன்னகையுடன்…
உன் மீது அளவுகடந்த வாஞ்சையுடன் இருக்கிறேன் நான்
என்றும் தீராத அழகுடன் திகழ்கிறாய் நீ
உன்னை எப்படி மறக்கச் சொல்கிறாய் ?
மிக அழகான நாட்கள் அவை...ஒரு வசந்தகாலம்!
அன்றைய வெயில் இதைக்காட்டில் மிகவும் இதமாக இருந்தது
அந்த உதிர்கால இலைகள் ஒரு கலப்பையால் அள்ளிச்செல்லப்பட்டது !
மிக மென்மைக்குரிய தோழியாக இருந்தாய் நீ எனக்கு…
வருந்தியிருப்பதைத் தவிர
இனி செய்வதற்கொன்றும் இல்லை எனக்கிப்போது..
ஆனால்...நீ எனக்காக பாடிய அந்தப் பாடல்
அது எவ்வெப்போதும்...என் காதுகளில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்...முடிவற்று... !
மொழிப்பெயர்ப்பு: பிரவீன்
கவிதை : Jaques Prévert
http://www.johnnymercer.com/
