மழைக்குத் தப்பி
உதிர்ந்து கொண்டிருக்கிறது
இலை .
அப்படியும் பொத்தென
இலை மேல் வந்து விழுந்தது
சற்று பெரிய மழை .
இலையை கொன்று விட்டதென
சொல்கிறாள் ஆலாபனா .
இல்லை ,
இலை தான் மழையை கொன்றுவிட்டதென
அழுகிறாள் ஆராதனா .
கன்னி மழைக்கு ,
வயதான இலை மீது சொல்லொணா
மோகம் என்றான் அனந்தன் .
யாரும் பிறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை என்றான் அதிதி .
பார்த்துக் கொண்டிருந்த திகம்பரன் ,
மழைக்கு, கடவுளின் விந்தென்றும்;
இலைக்கு ஜீவவாசல் என்றும்
பெயர் வைத்தான் .
பிரம்மா, படைக்கும் வேலையில்
ஈடுபடலானான் .
- கார்த்திக் நேத்தா
