பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 27, 2010

ஓடற்ற நத்தையைப் போல - அவனி அரவிந்தன்

வழமையாகக் கழியும் 
தினங்களில் கரியைத் 
தோய்த்தது வானவிழ்த்த
நீர்த்திரைகள்

நனைந்த மேனிகளை விட்டு
நழுவிக் கலைந்தது
சில ஆழ்ரகசிய நிறங்கள் 

விளக்கணைத்த 
வீட்டுக் கதவுகள் வழியாக 
சிதறிய திரவத்திவலைகளை
எதனுடன் உருவகப்படுத்துவதென்று 
யோசிக்கிறது
ஒவ்வொரு வாசலிலும்
விழுந்துறங்கிக் கொண்டிருக்கும் வீதி

பாதையோரப் பள்ளங்கள் 
குவித்த நீரில் பதுங்கியபடி
என்னைத் துரத்துகிறது
புசித்தபின் மீதமிருக்கும்
பசியையொத்த
எனது பாதி பிம்பம்

சிறு சாரல் மழையின்
சங்கேத முணுமுணுப்புகளுக்கு
இருசெவிகளையும்
இரவல் கொடுத்தவாறு
ஒத்தையாய் ஊர்கிறது
நெடிய இரவு,

சந்தடி மிகுந்த
சாலையைக் கடக்கும்.
ஓடற்ற நத்தையைப் போல ...!

- அவனி அரவிந்தன் 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com