நீரின்றி அமையாது நிலவு
நீரின்றி அமையாது
நிலத்தில் நிலவு .
நிலத்தில் நிலா
முழுதாய்ப் பூக்க வேண்டுமெனில்
நீர் வேண்டும்.
புல்லாங்குழலில் வெட்டிய
ஏழு கிணறுகளில்
ஏழாய்ப் பூக்கிறது
ஒற்றை நிலா .
நிலா பூத்திருப்பது தெரியாமல்
கிணத்தங்கரையில் அமர்ந்து
பீடி ருசிக்கிறான் கிணறுவெட்டி .
புல்லாங்குழலை
திருடிச் செல்லும் சிறுவன்
வழியில் சிந்திக் கொண்டே
ஓடுகிறான்
ஏழு கிணத்து நீரையும்
ஏழு நிலவுகளையும்.
நட்ட சுடர்
நிற்க வைத்த சுடராக
எரிந்து கொண்டிருக்கிறது
சொல் .
ஒற்றைச் சொல்லை
படிக்க வருகிறது
ஒவ்வோர் இரவும்
ஒவ்வோர் இரவு .
அர்த்தம் புரிந்து கொண்ட
இரவின் தலையில்
பௌர்ணமி பூக்கிறது .
நிலவு வராத இரவையும்
இரவெனவே அழைப்போமென
கோபிக்கின்றன
வரிசையில் நிற்கும் இரவுகள் .
அந்தச் சொல்லிலிருந்து பிரியும் புகை
மேகமாய் அலைய ,
சொல்லின் அடிவயிற்றில்
உதிக்கிறது மஞ்சள் சூரியன் .
சொல்லின் கீழே
சிணுங்கிக் கொள்கிறது
அர்த்தம் புரிந்த இரவு .
- கார்த்திக் நேத்தா
