பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 5, 2010

சொல்லாமை- முத்துபாண்டி





நாம் எதுவுமே சொல்வதில்லை.

கையேந்தும் முகங்களை புறக்கணித்து
பேருந்தை எதிர்பார்ப்பதைப் போல் திரும்பிக்கொள்கிறோம்.

இரண்டு நாட்களாய் 200ரூ கடன் கேட்கும்
நண்பனின் அழைப்பை எடுக்காமல் விடுகிறோம் அல்லது
வன்மத்துடன் துண்டிக்கிறோம்.


படுகொலைகள், இன எழுச்சி மாநாடு,
கள்ளக்காதல் வசீகரம், 
ஐந்தாண்டு கால சாதனைப்பட்டியல் பற்றிய செய்திகளை 
நரசுஸ் காபியின் காலைப் பரவசத்தோடு
அருந்தி முடிக்கிறோம்.

ஷேர் ஆட்டோவில்
கிளர்ச்சியான உரசல்களோடு
ராயபுரம் மார்க்கெட் வரை வந்த
பான்ட்ஸ் பவுடர் வாசனையின்
“வர்றியாகேள்விக்கு சட்டெனக் குறிதளர்ந்து
பதட்டமடைகிறோம்.

எதுவுமே சொல்லாத நமது
கயவாளித்தனங்கள்,துரோகங்கள்,அலட்சியங்கள்
பற்றிய சித்திரத்தை
யாரேனும் சொல்லக்கூடுமெனில்
ஒரு சிகரட்டோடு சிறுநீர் கழிக்க எழுந்து போகிறோம்.

சொல்லவும் கேட்கவும் முடியக்கூடியவைகளுக்கு
மத்தியில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன
சில தத்துவ விசாரணைகள். உரையாடல்கள். மற்றும்
கேள்வி பதில்கள்.

முத்துப்பாண்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர். சொந்த ஊர் மதுரை. தற்பொழுது சென்னையில் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருடைய கவிதைகள் காட்சியில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இதுவரை காட்சியில்
இடம் பெற்ற அவருடைய ஏனைய கவிதைகள்.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com