அறிமுகம்
இயக்குநர் சீனுராமசாமி, பூர்வீகம் மதுரை. படித்தது மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி. மணம் புரிந்திருப்பது தமிழாசிரியை. மகள் பெயர் தியானா செந்தமிழ். முதல் திரைப்படம் கூடல் நகர். “ தென்மேற்கு பருவக்காற்று” கூடியவிரைவில் திரையரங்குகளில் வீச இருக்கிறது. முதல் கவிதை நூல் “ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்”. காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வெளிவர இருக்கிறது.
நீ வெளியேற
போதுமான காரணங்களை
நானே தர முன்வந்த
வெயில் கால இரவில்
அந்த அலை
அடித்தது.
உன் விருப்பமும்
என் விருப்பமும்
இரக்கமின்றி முட்டி மோதிய
இடைவெளியில்
அந்த அலை
அடித்தது.
உனக்கான வீட்டில் நீயும்
எனக்கான வீட்டில் நானும்
தனித்திருக்க முடியாத
அச்சந்தர்ப்பம் பார்த்து
அந்த அலை
அடித்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு
நீயும் நானும்
சந்தித்த பரவசமற்ற
கணத்தில்
அலை கடலாக
இருந்தது.
- சீனுராமசாமி

