பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 7, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 2-யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. பகுதி 1 ஐ இங்கு படிக்கவும் : http://kaattchi.blogspot.com/2010/04/1_7008.html



பகுதி 2

             அஞ்சனா படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னைக்கு அருகே இருந்த கடம்பத்தூரில். அவளுடைய தாத்தா வேலை நிமித்தம் வந்து தங்கிய பின், அதுவே சொந்த ஊர் ஆனது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இடைப்பட்ட அந்த ஊரில், அஞ்சனாவின் தந்தை பார்த்தசாரதியும் தாய் கமலாவும் மிகவும் பேசப்பட்ட மருத்துவர்கள். ஐந்து பிள்ளைகளில் மூத்தமகனான பார்த்தசாரதி டாக்டராகி வந்த பிறகு தான், ஏனையவர்களை கரையேற்ற முடிந்தது. தாத்தாவின் குடிப்பழக்கம் குடும்பத்தின் நிதிநிலையை வெகுவாய் குலைத்து இருந்த சமயம், அப்பாவின் கடின உழைப்பால், அவருடைய இரண்டு தங்கைகளும் மருத்துவர்களாகவும், ஒரு தம்பி ஓவியக் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் வேலைக்கு போகவும், கடைசி தம்பி இளநிலை கல்வி பயின்று, பின் அப்போது அரசியலில் அமைச்சராகவும் ஆக்க முடிந்தது.


இந்த ஐந்து பிள்ளைகளும் வீட்டின் நிலையறிந்து படித்ததாலும், பாட்டி சின்னம்மாவின் கடின உழைப்பாலும் நன்கு வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். ஆனால் தந்தைதான் அந்த குடும்பத்தின் ஆணிவேரானார். 70களில் ஒரு குடும்பத்தில் அதுவும் எப்போதும் குடித்துக்கொண்டு இருக்கும் ஒரு மனிதரின் பிள்ளைகள் எல்லாவரும் வெகு நல்ல நிலையடைந்தது பலருக்கு கண்ணுறுத்தலாக தான் இருந்திருக்கக்கூடும். ``எல்லாம் கோட்டால படிச்சு பெரிய ஆளாயிட்டானுங்க! என்ன ஆனாலும் பறப்பயலுகடா நீங்க. எங்க ஜாதிக்காரனுங்க போட்டதை தின்னுதானேடா வளர்ந்தீங்க பறப்பு------களா !`` என்று குடித்துவிட்டு வாசலில் தினம் சத்தம்போட்டுக்கொண்டு போன ஒரு எதிர்கட்சி குடிமகன் பேசியதன் அர்த்தம், 11 வயது ஆன அவளுக்கு அப்போது புரியவில்லை.

              அஞ்சனாவிற்கும் படிக்கப்பிடிக்கும். தமிழ் ஏனோ மிக பிடித்தது, கணிதமும். எப்போதும் நல்ல மதிப்பெண் எடுக்கும் அதுவும் முதல் ஐந்து ராங்க் எடுக்கும் கூட்டத்தில் இருப்பாள். 10வது படிக்கும்போது 500க்கு 430 மதிப்பெண் எடுத்ததிற்கு, ஆதிதிராவிட வகுப்பில் மாநிலத்தில் 400க்கு மேலே எடுத்தவர்களுக்கு வந்த அந்த certificateம், 500 ரூபாய் காசோலையும் இவளுக்கும் கொடுத்தார்கள். அண்ணாவிடம் பந்தா காமித்து முதுகில் பளாரென்று அறைவாங்கி, பின்னிருவருக்கும் குடிமி பிடி சண்டை நடந்தது வேறு விஷயம். அவள் +2விலும் நல்ல மதிப்பெண் வாங்கிய போது, `` உனக்கென்னடி, உன்னோட SC casteக்கு நீ இதைவிட குறைவா மார்க்கு வாங்கினா கூட மெடிக்கல் சீட் வாங்கிரலாம்`` என்று சொன்ன முகமதி பேகம் இப்போது எங்கு இருக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டாள்.

              அம்மாவிற்கு நல்ல fashion sense. ஒரு நாளும் தனக்கான உள்ளாடைகள் கூட அஞ்சனா வாங்கியது இல்லை. அழகான லாவண்டரும், மிருதுவான நீலமும் கொண்டு துணிகள் நிறைய எடுப்பாள். அவளுடைய ஊரில் அவளுடைய உடுப்புகளை பார்த்து உச்சிக்கொட்ட ஒரு தோழிகள் கூட்டமே இருந்தது. ``உங்கம்மா அழகாய் துணி தேர்ந்தெடுக்கிறாங்கடி`` என்ற பெருமூச்சு விடும் பாரதிக்கு இப்போது இரண்டாவது பெண்குழந்தை பிறந்திருப்பதாய் சொன்னார்கள் அம்மா. பிறந்தது முதல் ஒரு நாளும் அம்மா அப்பாவை பிரிந்ததே இல்லை அவளும் அண்ணாவும். பள்ளியில் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாவிற்கு செல்லும்போது எல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். விட்டதே இல்லை ஒரு வருடமும். ``எத்தனை அழுதிருப்போம் மொட்ட வெயிலில் மகாபலிபுரம் தன் வகுப்போடு போக`` இப்போது சிரித்துக்கொண்டாள் அஞ்சனா. Life was brilliant and colourful when we were silly and naive. வளர வளர வண்ணங்கள் எங்கேயோ போயிற்று, மனம் வலித்தது.

                 இப்படி கூட்டுக்குள் வைத்து வளர்த்து விட்டு, பட்டென தனியான இடம் அவள் கல்லூரி. அண்ணாவிற்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் அவனுக்கு தனியார் கல்லூரியில் சேர்த்து விட யோசிக்க, இருவரும் ஒரே இடத்தில் படிக்கவேண்டும் என்று சொல்லி அஞ்சனாவிற்கு கிடைத்த செங்கல்பட்டு கல்லூரியை விடுத்து, அதே தனியார் கல்லூரியில் அரசினர் கோட்டாவில் அவளுக்கும் இடம் வாங்கினார்கள்.

                  சிதம்பரம்... அண்ணாமலை பல்கலைக்கழகம்... ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி... கடம்பத்தூரில் இருந்து காரில் 7 மணிநேரம் பயணம். இதற்கு முன் மதுரை, திருச்சி, சிதம்பரம் எல்லா கோயில்கள் பார்க்க வந்திருந்தாள் சில ஆண்டுகளுக்கு முன். பிடிக்கவே இல்லை அந்த பிரயாணம் அவளுக்கு. கோயில்கள் பிடித்த அளவு ஊர்கள் பிடிக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை, யோசிக்கவும் இல்லை. இப்போது அப்படி ஒரு ஊரில் தங்கவேண்டும் அடுத்த 5 வருடம். பயமாக இருந்தது.

                 சிதம்பரம் ரயில்வே கேட் தாண்டியதும் ``அண்ணாமலை நகர் உங்களை இனிதே வரவேற்கிறது`` என்ற அந்த மஞ்சள் பெயிண்ட் உதிர்ந்து போன பலகையும், நன்கு அமைக்கப்பட்ட சாலையும், பல்கலைக்கழக வளாகத்தில் நின்ற பெரிய ஆர்ச் மற்றும் பெரிய கட்டிடங்களும், நிற்காது ஓடிக்கொண்டிருந்த மோட்டர் சைக்கிள்களும், வெவ்வேறு கலர் உருவம் உயரம் உடை தாங்கிய மாணவ மாணவிகளும், பிரமாண்டமான vice chancellor மாளிகையும், இருபுறமும் இருந்த may flower மரங்களும் அந்த சாலை முழுக்க உதிர்ந்திருந்த மலர்களும், சாலையின் இருப்பக்கமும் இருந்த இரட்டை குளமும் எல்லாமே அவளை அன்று பயமுறுத்தியது.

                தாமரை இல்லம்... பெண்கள் விடுதியின் பெயர். ஒரு 5, 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது. மருத்துவம், நர்ஸிங், எஞ்சினியரிங், மற்ற இளநிலை படிக்கும் பெண்களுக்கு தனித்தனியே விடுதிகள். அஞ்சனாவின் விடுதிக்கு பெயர் ராணி மெய்யம்மை ஆச்சி இல்லம். ஆண்கள் அனுமதி இல்லை. அம்மாவோடு போய் தான் இருக்கப்போகும் அறையை பார்த்துவிட்டு, பொருட்கள் எல்லாம் வைத்து திரும்ப அந்த கேட் அருகே வந்து நின்றபோதும் அப்பாவை கட்டிப்பிடித்து ஒன்றுமே பேசாது இருந்ததும், அவர் கண்கலங்க நின்றதும், கார் கிளம்பி திரும்பி புழுதி மறையும்வரை கையசைத்துவிட்டு, சட்டென தனியானதின் பயமும், வலியும் தாக்க பாத்ரூமில் சென்று அழுததும் இன்று நினைவுக்கு வந்தது. சேய்ஷல்ஸ் செல்ல விமானநிலையம் வரும்போது அம்மா மட்டும் வந்து வழியனுப்பி வைத்தார்கள். செக்கிங் முடித்து திரும்பி பார்க்கும்போது கிளம்பிவிட்டு இருந்தார்கள். தனியே நடப்பது அவளுக்கு இப்போதெல்லாம் பழகிபோய்விட்டது.

                 இப்படியே யோசித்துக்கொண்டு உறங்கிப்போனாள். கனவில் தண்ணீரின் உள்ளே ஜெனிஸ் மீன்களோடு நீந்தி வந்து ப்ரட் கேட்டாள். பறக்கும் சிகப்பு கொக்கு கழுத்தில் சுறா பல் செயின் மாட்டி ``எப்போது என்னோடு பறக்கவருவே`` என்றது ஜிஜே குரலில். அவள் வீட்டு தெருவில் இடுப்பு அளவு ஜடாமுடியுடன் ராஸ்டா மக்கள் பச்சையும், சிகப்பும், மஞ்சளும் சேர்ந்த தொப்பிகளை விற்றார்கள் கஞ்சா புகைத்தப்படி.

                ஏதோ நாற்காலி நகற்றும் சப்தம் கேட்டு விழிப்பு வந்தது. எப்போது விழித்தாலும் இன்னும் ஒரு 10 நிமிடமாவது கூட படுக்கையில் உருளாமல் அவளுக்கு எழப்பிடிக்காது. மாடியில் அவள் அறைக்கு வந்து ``மணி ஏழாக போகுது, அம்மு... இப்ப எழலைன்னா அம்மா கத்துவா... எழுந்திரு மோளே ( மகளே ) என்று தலைமுடி கோதி  எழுப்பும் அப்பாவின் குரலையும் விரல்களையும் தேடுகிறாளோ தெரியவில்லை. காலைகளில் உறங்கியும் உறங்காத அந்த நிலை, உடம்பு முறுக்கும் ஒரு சுகவேதனை, விடிந்தும் விடியாத அந்த நேரம் அவளுக்கு மிகப்பிடிக்கும். எழவிடாமல் இடுப்பை வளைத்து இறுக்கி கட்டிப்பிடித்து உடம்போடு அழுத்தும் இறுகிய உடலும், காது மடல்கடித்து கழுத்து கூசும் அந்த சூடான குசுகுசுப்பேச்சும், உடல் முழுக்க விளையாடும் அவன் இளம்சூட்டு விரல்களும் திடீரென நினைவுக்கு வந்தது. சட்டென மனம் கனமாக எழுந்தாள்.

                மொபைல் போனில் நேரம் 7 மணி. மிராண்டா ( Miranda ) வந்து இருப்பாள். 8.30 மணிக்கு patients வர தொடங்குவார்கள். எழுந்து போய் ஹாலில் பார்க்க மிராண்டா சுத்தம் செய்துக்கொண்டிருந்தாள்.  அவள் அங்கே receptionist ஆக வேலை செய்பவள். ஆன்ஸ் பொடேன்ல் (Anse Boudin) இருந்து தினமும் வருபவள். நல்ல புஷ்டியான தேகம். திரண்ட பிருஷ்டம். களையான முகம். கள்ளமில்லாமல் இருக்கும் அவள் சிரிப்பில் ஒரு warmth இருக்கும். 40 வயது குஷ்பு போல இருக்கும் அவளுக்கு 22 வயது மகள் இருந்தாள். திருமணம் ஆகவில்லை ஆனால் பாய்பிரண்ட் இருக்கிறான். அஞ்சனாவை பார்த்து `` பான் ஷு டாக்டர்`` ( Bon zour – good morning ) என்றாள். இவளும் ``பான் ஷு`` என்று சிரித்து, ``இன்று எத்தனை நேரம் ஆயிற்று உன் இடத்தில் இருந்து வர?`` என்று கேட்டாள். ஆன்ஸ் பொடேனிற்கு ஒரு சனிக்கிழமை அவள் வீட்டு பார்ட்டிக்கு போனப்போது தான் தெரிந்தது எத்தனை தூரத்தில் இருந்து வருகிறாள் மிராண்டா என்று. பே செயிண்ட் ஆனில் இருந்து ஒரு 1 மணிநேரம் சென்று, பிறகு பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு மணிநேரம் செங்குத்து பாறைகளில் ஏறிசெல்லவேண்டும் அவள் வீட்டுக்கு. சரியான பாதை கிடையாது. மலையின் உச்சியில் வெகு அழகான ஒரு வீடு. பாறைகளை குடைந்தும் சமமாக்கியும் அறைகளும், எந்த புறம் இருந்து பார்த்தாலும் கீழே தெரியும் கடலும், தூரத்தே தெரியும் மற்ற தீவுகளும் வெகு அழகு. ஆனால் தினமும் இந்த மலை ஏறி இறங்குவது எத்தனை கடினம். அதுவும் ஒரு ஒழுங்கான பாதை இல்லாது, இருட்டில் ஒரு வெளிச்சம் இல்லாது, ஒரு பெருமழையோ, ஒரு அவசரம் ஆபத்தென்றால் என்ன செய்வார்களோ. அஞ்சனா கேட்டாள் ``எப்படி இந்த வீட்டிற்கு இந்த பொருட்கள் எல்லாம் தூக்கி வந்தீர்கள்?`` என்று. அந்த வீட்டின் செங்கல், ஜல்லி, சிமெண்ட் முதற்கொண்டு அதில் இடம் பிடித்து இருக்கும் அத்தனை பொருட்களும் பஸ் நிறுத்தத்தில் இருந்து தூக்கியே வந்ததாகவும், தானே பல பொருட்களை தூக்கி வந்ததாகவும் மிராண்டா கூறக்கேட்டு வாய் பிளந்து நின்றாள் அஞ்சனா. அவளுக்குள் மாறாத கேள்வி,`` இத்தனை தூரம் தினம் நடந்தும் எப்படி இவள் இளைக்கவே இல்லை`` என்று.

                அவள் சொன்ன பதிலுக்கு சிரித்துவிட்டு குளிக்க சென்றாள். அவள் குளித்து திரும்பும் சமயம் 4, 5 பேர் காத்திருந்தார்கள். உடை மாற்றி வந்து அறையில் அமர்ந்து வழக்கம் போல நோயாளிகளை பார்க்க தொடங்கினாள். மரியா (Maria) அன்று சிறிது தாமதமாக வந்தாள். மரியாவிற்க்கும் 40 வயதிருக்கும். அவள் கனடா (Canada) பிரஜை. அங்கு இருந்த அவள் பாட்டி தாத்தாவை பார்க்க வந்த போது அவளுக்கும் அவள் கணவனுக்கு காதலாகி, இங்கேயே திருமணம் ஆகி தங்கிவிட்டாள். அவளும் சிறிது ஜெனிஸ் போல தான். ஆனால் நல்ல சிரிப்போடு வளைய வருவாள். இந்த காலை வேளையில் எப்படியும் ஒரு 30ல் இருந்து 50 பேஷண்ட் வருவார்கள். அவர்களுடன் பேசி பேசி ஓரளவு க்ரியோல் புரிந்தது. வருபவர்களிடம் நலம் விசாரித்து மருந்து கொடுத்து அனுப்பியவள், மிராண்டா கொண்டு வந்த டீயை குடித்தாள்.

                 அங்கு வரும் தலை முழுக்க ஜடைகள் நிறைந்த குழந்தைகள் அவளுக்கு மிக பிடிக்கும். குழந்தைகளுக்கும் அஞ்சனா வரையும் tattoo மிக பிடிக்கும். எத்தனை சிறிய குழந்தையானாலும் இவளுடன் ஒட்டிக்கொள்வார்கள். அவளுக்கு லாலிபாப் கொண்டுவருவார்கள். அவளுக்கும் அவர்கள் கையில் பட்டாம்பூச்சி, பல்லி, சிலந்தியை கலர் கலராக வரைய வெகு விருப்பம். அங்கு அவள் கண்ட ஒரு விஷயம் பெண்கள் அவர்கள் முடியின் மேல் காட்டும் சிரத்தை. ஆப்ரிக்க இனமானதால் அவர்கள் முடி நைலான் கயிரு போல இருக்கும் சுருண்டு. அதை சரி செய்ய உபயோகிக்கும் ஷேம்பூக்களும், ரிலாக்சர்களும், முடியை நேராக்க செலவிடும் தொகையும், சொல்லி மாளாது. நீளமான மிருதுவான கூந்தல் இருக்கும் பெண்கள் அழகு என்று நினைப்பது அங்கு எழுதாத சட்டம், நம் ஊரில் சிகப்பாக இருப்பது எப்படியோ அப்படி. ஒரு முறை மிராண்டா Hair saloon கூட்டிப்போனாள். அங்கு பணிபுரியும் பெண் இவளுடைய patient தான். Hair trim செய்ய போனவளுக்கு தலைமுடி கழுவி விட அஞ்சனாவிற்கு தலையே வலித்தது. அந்த பெண்ணிடம் இத்தனை அழுத்தமாக தேய்க்க வேண்டாம் என்று கூற, இங்கு இருக்கும் பெண்களுக்கு இதைப்போல 10 மடங்காவது அழுந்த தேய்த்தால் தான் கழுவமுடியும் என்றாள். அங்கு இருக்கும் அத்தனை பெண்களும் Hair saloon சென்று வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ தான் தலை குளிப்பார்கள். அதன்பின் அவள் அந்த பக்கமே திரும்பவில்லை.

              அதே போல பெண்களின் உடல் வாகு. அஞ்சனாவிற்கு சிறிதும் பிடிக்காதது அவள் உடல் வாகு. ஆனால் இங்கேயோ பெண்களின் பின்புறம் எத்தனை பெரியதோ அத்தனை கிராக்கி அந்த பெண்ணுக்கு. வேண்டும் என்றே இன்னும் கண்ணை உறுத்துவது போலவே பெண்கள் உடையுடுத்துவது அவளுக்கு விசித்திரமாக இருந்தது. இவள் போடும் தொள தொள ஆடைகளை பார்த்து கிண்டல் செய்து ‘’ You should dress up for your age, doctor!’’ என்று கூறி செல்பவர்கள் அதிகம். ஆக மொத்தம் அங்கு வரும் பெண்களுக்கு அஞ்சனாவின் முடியும், ஆண்களுக்கு அவள் முன்புறமும் பின்புறமும், குழந்தைகளுக்கு இவள் வரையும் டாட்டூவும், ``மல்பா``களுக்கு அதற்குள் பரவி இருந்த அவள் ஜாதிபெயரும் அவளை பற்றி பேச, வேறு எந்த விஷயமும் கிடைக்காத தினங்களில் தினம் ஒரு கதை கொடுத்துக்கொண்டு இருந்தது. அத்தோடு சேர்ந்து ஜிஜேயும் அவரைப் போலவே வயதான பணக்காரர்கள் அவளிடம் வந்து வலிய பேசயத்தனிப்பதும் சேர்ந்துக்கொண்டது. எப்போதும் போலவே ஜனத்திரளின் நடுவே தனியானாள்.

              கல்லூரியில் நுழைந்து விடுதியில் அவளுடைய அறையில் அவளோடு 5 பேர்கள் இருந்தார்கள். ஷீபா, புனிதா, அனிதா, கவிதா, கமலப்ரியா.... ஷீபா சென்னையை சேர்ந்தவள். தந்தை காது மூக்கு தொண்டை நிபுணர். புனிதாவும், கமலப்ரியாவும் ஈரோட்டில் இருந்தும், அனிதா கோவையில் இருந்தும், கவிதா உடுமலைப்பேட்டையில் இருந்தும் வந்து இருந்தார்கள். அவரவர்கள் அம்மாக்கள் வந்து பொருட்கள் கொடுத்து செல்லும்போது, ``நீ நம்ம பொண்ணாமா`` என்ற கேள்வியின் அர்த்தம் புரியவே இல்லை அஞ்சனாவிற்கு. அதற்கு பின் நடந்த ராகிங் போது, ஊர் பேர் கேட்டதோடு மாறாமல் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி, ``என்ன caste, அஞ்சனா நீ?``. அப்போது தெளிவாக சொன்னது அவள் குரல், ‘’நான் scheduled caste’’ என்று. அதற்கு பிறகு வந்த கேள்வி, ``நீ என்ன Vice chancellorக்கு சொந்தமா? அவரும் உங்க ஆளு தானே`` என்று சிறிது நய்யாண்டியுடன் வந்த வார்த்தைகளின் முழு அர்த்தமும் இன்னமும் புரியவே இல்லை. ராகிங் எல்லோரையும் கலக்க நடந்த ஒரு நிகழ்வு தானே. அதில் ஜாதி என்ன செய்தது? தேவர் சமூக பெண்கள் `` நீ எந்த கூட்டம் காடைக்கூட்டமா, கவுதாரிக்கூட்டமா`` என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்க, நாடார் கிருஸ்துவர்கள், அவர்கள் போகும் சர்ச் பற்றி பேச, சென்னை பெண்கள் சர்ச் பார்க், கேந்திரிய வித்யாலயாக்களை சூழ்ந்துக்கொள்ள, இன்னமும் முதலியார்களும், ஐயர்களும், பிள்ளைகளும் குழும, ஒரு மொட்டை மாடியில் அத்தனை பேரின் மத்தியில் அவளும் அவளைப்போலவே சிலரும் தனியானார்கள். அதன்பின் காலேஜில் போகும் வழியெல்லாம் நின்று இருந்த ஆண் சீனியர்களும் தனியே கூப்பிட்டு பெயர், ஊர், ஜாதி கேட்டப்பின் அவளை தனியே யாரும் கூப்பிடவே இல்லை. அஞ்சனாவின் ஆதிதிராவிடனை அங்கு இருந்த தேவரும், நாடாரும், முதலியாரும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளாதது லேசாக வலித்தது.

             மனம் திரும்ப அவளின் வேலையில் லயிக்க, காலை session முடிக்கும்போது மணி மதியம் 1. பசிக்க தொடங்கியது அஞ்சனாவிற்கு. மரியா கேட்டாள், சாம்ஜி, ஜிமாஸ் ( Sanmdi, Dimans – Saturday, Sunday) என்ன ப்ளான் என்று. அதற்குள் ஒரு வாரம் ஓடிப்போய்விட்டிருந்தது. ஒன்றும் இல்லை என்றப்போது, அவள் வீட்டில் நடக்க இருக்கும் பார்ட்டிக்கு வரச்சொன்னாள். அந்த மதியப்பொழுதும் பெரிதாக ஒன்றும் இல்லாது கழிந்தது. அன்றும் வழக்கம் போலவே ப்ரட் எடுத்துக்கொண்டு ஜெட்டியை நோக்கி நடக்கும்போது, அவளின் பின்னிருந்து ஒரு குரல். அவளுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் லூயிஸ். கறுத்தவன் ஆனால் களையானவன், வெகு நேர்த்தியானவன். அஞ்சனா சிரித்து ‘’ Hi`` என்று கூற அவனும் அவளோடு நடக்க தொடங்கினான்.

           அந்த ஊரில் அவளுக்கு ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்த ஒரு விஷயம், பார்க்கும் ஆண்கள் எல்லாவரும் அவர்களோடு வரும்படி அழைப்பது. கடம்பத்தூராக இருந்தால் இதற்குள் வீட்டிற்கு சொல்லி, குடும்பத்துடன் குடும்பங்கள் மோதி, ரத்தம் சிந்தி ``என்ன தைரியம்டா உனக்கு எங்க வீட்டு பொண்ணை கண்ணெடுத்து பார்த்தே`` என்ற ரீதியில் கதைகள் ஓடியிருக்கும். ஆனால் அவள் இருந்த இந்த ஊரில் ``பிடித்திருக்கு அழைக்கிறோம், பிடித்தால் வா, பிடிக்கவில்லை என்றால் No great shakes`` என்று போகும் மனது அவளுக்கு பிடித்திருந்தது. ஆணோ பெண்ணோ, அங்கீகரிக்கப்படுவது அழகான விஷயம் தானே. இது வரை அவளுக்கு தெரியாது, அவள் கொஞ்சமேனும் அழகாக தான் இருக்கிறாள் என்று. இங்கு தினமும் ஒரு 5 பேராவது ``வாயேன் என்னோடு, நீ அழகாக இருக்கிறாய் `` என்றது ஒரு புது உயரத்தை தந்தது அவளுக்கு.

            லூயிஸ் கேட்டான், ‘’ Are you heading out to your usual spot’’ என்று. அஞ்சனாவும் லேசாக சிரித்து ஆம் என்றாள். ``இன்று வெள்ளிக்கிழமை. டிஸ்கோ இருக்கு, வா போகலாம்!`` என்றான். இத்தோடு ஒரு 10 முறையேனும் கூப்பிட்டு விட்டான். அவளும் பழக்கம் இல்லை என்று கூறி மறுத்துவிட்டாள். லூயிஸ் சொன்னான், ``என் நண்பர்கள் மாஹேவில் இருந்து வருகிறார்கள். டிஸ்கோவில் இன்று ‘’Mercenary gang’’ ( அங்குள்ள வெகு பிரபலமான ராஸ்டா இசைக்குழு ) பாடப்போகிறார்கள். உன்னை யாரும் தொந்திரவு செய்யமாட்டார்கள் வாயேன்,`` என்றான். பெர்ஜயா (Berjaya) ஐந்து நட்சத்திர ஓட்டலின் administrative manager அவன். அவனிடம் ``நான் இதற்கு முன் டிஸ்கோ எல்லாம் போனதே இல்லை. I probably would feel out of place!’’ என்றாள். அதற்குள் வெள்ளை நிற காட் கோகோ (cat coco), மாஹேவில் இருந்து தினமும் 6 முறை ப்ராலின் வரும் படகு வந்து சேர்ந்தது. அவனிடம் இருந்து எப்படி கழன்றுக்கொள்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, ``ஓய்!`` என்ற கூச்சல் கேட்டு திரும்பிய இடத்தில் ஒரு 25 பேர் நின்றுக்கொண்டிருந்தார்கள் அவனையும் அவளையும் பார்த்து சிரித்தப்படி. அதில் அவனும் இருந்தான்.
- யமுனா ராகவன்
தொடரும்
                                 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com