பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 5, 2011

கருங்குழி சேரும் பேச்சொலி - ப்ரவின்துள்சி

ஆசிரியர் அறிமுகம்: ப்ரவின்துள்சி. மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஒரு கவிஞர், ஓவியர், கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர். கீற்று மற்றும் உயிர்மை போன்ற தளங்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
 கருங்குழி சேரும் பேச்சொலி:
நாம் பேசத்தொடங்கியிருந்த நாட்களில்…

முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்

அது ஒரு கோழியிறகின் மேல்

காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !



பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…

அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை

மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !



பிறகு என்னைப் பற்றி பேசினோம்…

அவை ஒரு சாம்பல் நிற பூமியின்

புதினமென நம்பினாய் !



அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…

ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்

பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !



தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…

பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய

 பேச்சுகள் தவிற்க முடியாததாகின !



எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்

மௌனம் நம் மத்தியில்

நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !



பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…

அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்

வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !



பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…

இதுவரை பேசியவை எல்லாம்

சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !



பின் நாட்களில்…

யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்

நாம் முன்பு எப்போதையும்விட
மிகவும் கவனத்துடன் இருந்தோம் !
 -  ப்ரவின்துள்சி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com