ஆசிரியர் அறிமுகம்: ப்ரவின்துள்சி. மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஒரு கவிஞர், ஓவியர், கட்டுரையாளர், புகைப்படக் கலைஞர். கீற்று மற்றும் உயிர்மை போன்ற தளங்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
கருங்குழி சேரும் பேச்சொலி:
நாம் பேசத்தொடங்கியிருந்த நாட்களில்…
முதலில் கவிதைகள் பற்றி தான் பேசினோம்
அது ஒரு கோழியிறகின் மேல்
காற்றில் பயணம் செய்வதைப் போலிருந்தது !
பின் எழுத்தாளர்கள் பற்றி பேசினோம்…
அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை
மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !
பிறகு என்னைப் பற்றி பேசினோம்…
அவை ஒரு சாம்பல் நிற பூமியின்
புதினமென நம்பினாய் !
அதன்பின் உன்னைப் பற்றி பேசினோம்…
ஒரு சொட்டு பாதரசத்தை எனது உள்ளங்கையில்
பத்திரமாக கொண்டு சேர்த்தாய் !
தொடர்ந்து பிறரது காதல்களைப் பற்றி பேசினோம்…
பின், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் , துரோகங்கள் பற்றிய
பேச்சுகள் தவிற்க முடியாததாகின !
எதிர்பார்ப்பு, தனிமை, ஏக்கம் பற்றி பேசி முடிகையில்
மௌனம் நம் மத்தியில்
நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது !
பின் நாம் உடல்களின் மொழிகளில் பேசினோம்…
அவை இதுவரை பிறக்காத ஒரு மொழியில்
வேறு குரல்களில் பேசப்பட்டது குறித்து பதற்றமடைந்தோம் !
பிறகு நாம் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை…
இதுவரை பேசியவை எல்லாம்
சட்டென ஒரு கருங்குழியில் சென்று மறைந்துவிட்டிருந்தது !
பின் நாட்களில்…
யாருடனாவது கவிதைகள் பற்றி பேச நேரிடுகையில்
நாம் முன்பு எப்போதையும்விட
மிகவும் கவனத்துடன் இருந்தோம் ! - ப்ரவின்துள்சி.


5 கருத்துகள்:
அருமை
இன்று
அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
வாழ்த்துக்கள் சார் அருமை
வாழ்த்துக்கள் சார் அருமை
ஒரு உரையாடல் , கோழி இறகின் மீது காற்று பயணிப்பதை போன்று லாவகமாக தொடர்கிறது . பின் கொஞ்சம் சறுக்களுக்கு பிறகு சாம்பல் நிற பூமியின் புதினமென , முடிச்சிகளோடு உருள்கிறது . உருண்டு வந்த முடிச்சி ஒரு சொட்டு பாதரசமென உள்ளங்கையில் வந்து சேர்கிறது . உள்ளங்கையில் வந்து சேர்ந்த பாதரச சொட்டு , அங்கேயே நில்லாமல் துரோகம் , நம்பிக்கையின்மை என அங்கும் இங்குமாக உருண்டு கொண்டே இருக்கிறது தனக்கே உரிய இயல்போடு . பின் அந்த பாதரச உருண்டை , அலுப்பின் காரணமாக "புரியாத உடல் மொழியில் " பேசி பதற்றமடைகிறது . இப்படி இப்படியாக நீண்டு வந்த உரையாடல் பின் ஒரு கருங்குழியில் போய் சேர்ந்துவிட்டது ! இப்படி ஒரு உரையாடல் கற்றுக்கொடுத்த கவனம் , பின் அவிழ்ந்த எல்லா கவிதை உரையாடல்களிலும் பிரதிபளித்தவண்ணம் இருந்தது ......
படித்து படித்து வழுக்கி விழுகிறேன் நான் ...... கவிதை மொழி காட்சி மொழியாய் விரிவடைகிற பரிணாமம் , எல்லா கவிதைகளிலும் நிகழ்வதில்லை . ஆனால் பிரவீன் உனதிந்த கவிதையில் அது நிகழ்ந்தது .
முன்னம் , உனது "புலன்களின் சாவி" என் கவனம் இழுத்தது . பின் வந்த "உதிர்காலத்தின் இலைகள் " இழுத்து செல்லப்பட்ட என் கவனத்தை அமரச்சொல்லி விசிறிவிட்டது . பின் நீண்ட காத்திருப்புக்கு பின் என் கவனம் மீண்டுமாக " கருங்குழி சேரும் பேச்சொலி" மூலம் பிரவீன் துளசியின் கவிதை வாசம் நுகர்கிறது ......
இந்த கவிதையை படிக்க துவங்கியபோதே , எனக்கு ஒன்று வந்து ஞாபகத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது . நாம் முதலில் பேசியது கவிதைகளை பற்றியது தான் என்பதும் , பின் கவிஞர்களை பற்றி பேசினோம் .... ஆனால் எனக்கு எப்போதும் உன்னுடனான உரையாடல் அலுப்பு தட்டியதில்லை .
"அது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை
மாறாக அவை அலுப்பைத் தருவதாகக் கூறினாய் !" இந்த வரிகளை கடக்கும் போது முடிவுக்கு வந்தேன் இது நமக்கானது இல்லை என .... எனவே நமது பேச்சொலிகள் கருங்குழி சேராது என்கிற நம்பிக்கையோடு , இந்த கவிதையில் இருந்து என்னை உருவி வைத்துவிட்டு மீண்டுமொரு முறை இந்த கவிதை வாசிக்க தயாராகிறேன் , ....
கோழி இறகின் மீது காற்றை போல தொடங்கிய நேசத்திற்குரிய ஒருவருடனான உனதிந்த பேச்சொலிகள் கருங்குழி சேர்ந்தது என்பதோடு நிறுத்தி கொண்டாய் . ஆனால் உன் அன்பிற்குரியவருடனான கருங்குழி சேர்ந்த பேச்சொலிகள் , அங்கேயும் ஓயாமால் உரையாடிகொண்டிருக்க கூடும் , உங்கள் இருவரின் அனுமதி இன்றியும் , உங்கள் இருவரின் இருத்தல் இன்றியும் ...
கருங்குழி சேர்ந்த பேச்சொலிகள்
இந்த கவிதையை சுற்றி நிறைக்கிறது என் கரவொலிகள் ........!!!!
அனைவருக்கும் நன்றி...நன்றி உதையா...
Post a Comment