அவசியம் இல்லாவிடினும்
மாதம் ஒரு முறையாவது
தவறாமல் செல்கிறேன்
தேரடி வீதியில்...
குடுகுடுப்பைக்காரனுக்குப்
பயந்து ஓடிய
குறுக்குத் தெரு கூட
முகமறந்த நண்பனைப் போல
என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறது...
மிதிவண்டியிலிருந்து
விழுந்த தடம்,
ஊர்திகள் விரையும்
இந்தத் தார்ச்சாலைக்கு அடியில்
எங்கோ புதைந்து கிடக்கிறது...
முழங்கைத் தழும்பை
தடவிக்கொள்கிறேன்...
போகுமுன் பதியனிட்ட மாமரம்
வாசலை ஒட்டி
இருபதடிக்கு வளர்ந்திருக்கிறது...
அதன் நிழலில்
யாரோ ஒருத்தி
கைக்குழந்தையுடன் நிற்கிறாள்...
அந்த நிழல்
எனக்குச் சொந்தமில்லை...
அளவுக்கு அதிகமாக
அரிதாரம் பூசிக்கொண்டு
ஒரு அடிகூட நகராமல்
அதே இடத்தில்
மாறுவேடம் பூண்டு நிற்கிறது,
கடனுக்கு முங்கிப் போன
எங்கள் பழைய வீடு...!
- அவனி அரவிந்தன்.

