இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
பாவனை
காத்திருந்து காத்திருந்து
தூங்கிக் கிடக்கிறதென்
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி
தூங்கட்டுமென
எழுப்பாமல் விடுகிறாய்..
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..
முரண்கள்
உன்னிடம்
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்
கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்
சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை
இணைப்பது
இந்த முரண்கள்தான்.
- இவள்பாரதி.
