பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 1, 2010

இவள்பாரதி கவிதைகள் - 8

இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.

பாவனை 

காத்திருந்து காத்திருந்து 
தூங்கிக் கிடக்கிறதென் 
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி 
தூங்கட்டுமென 
எழுப்பாமல் விடுகிறாய்.. 
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து 
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..
 
முரண்கள்

உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.
 
- இவள்பாரதி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com