பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 14, 2010

கூழாங்கல்.. - கார்த்திக் நேத்தா



கூழாங்கல்லின் தனிமை
எனக்கு வேண்டும் .

நதிகளின் பெரும் அமைதியின்மை
நிறைந்த தனிமை அது .

குழந்தைகளின்
கனவுகளில் தொலைந்து கொண்டேயிருக்கும்
தாங்கவொண்ணா மகிழ்வு நிறைந்தது
அத்தனிமை .

எண்ணிய எண்ணியாங்கு
செய்ய விடாதது .

ஒலிகளின் சவப்பெட்டியாக
கிடக்கும் மாமனநிலையில்
அமிழ்ந்து போக பெரிதும் விரும்புகிறேன் .

பயணத்தின் போது
முட்டிக் கொண்டு வரும் மூத்திரம் ,
ஒரு கணமேனும் நம்மை நாம் மட்டும் வசிக்கும்
உலகில் வீசி எறியுமே ;
அந்தத் தனிமை எல்லாப் போதும் வாயித்தால் ,
கல்லின் தனிமை அஃதே .

பாலிதீன் பைகளில்
கூழங்கல்லை அடைத்துக் கொண்டு போகும்
உங்களை வெறுக்கிறேன் .
மலைகளின் பாட்டனை கொல்லும்
வன்கொடுமை அது .


கடலை ,
கடற்கரைக்கு சென்று கற்றுக் கொள்ளும்
உங்களுக்கு ,
கடத்தி வரப்படும்
கூழாங்கல்லின் கேவல் புரியாது .


நீரின் மரித்த கண்களை,
கூழாங்கல்லாய் அலமாரியில் வைத்து
அழகு பார்க்கிறீர்கள்.

எல்லோராலும்
அகதியான கூழாங்கல்லே ....
உனது தனிமை தான் எத்தனை
துயர் நிறைந்தது .

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com