தொல்காப்பியனின் பூனை
அந்தப் பூனை
அலைந்துகொண்டே இருக்கிறது
வெளியிலிருந்து உள் ;
உள்ளிருந்து உள் .
அதன் விழி அவிழல் ஞானம் ;
கண் அயர்தல் தியானம் .
புறநானூற்றிலிருந்து தரலாம் .
கலிங்கத்துப்பரணி கடை திறந்து
பேய்களைப் புணர்ந்து தணியும் அது .
உங்களாலும் என்னாலும் தர முடியாத
நிலவூறிய மதுவை
அது கம்பனின் உண்டாட்டுப்படலத்திருந்து
பருகிக் கொள்ளும் .
சின்னக் குழந்தை
அழைப்பது போல
என்னைப் பார்த்து
அது ஒலி எழுப்புகிறது .
கடவுள் அழுவதை
அப்போது நிகழ்த்துகிறது
அதன் முக பாவம் .
அது பார்க்கிறது
உறைந்த புகைத்துளியாய்
நட்சத்திரங்களை .
நீர் நிலைகளில்
தனது மடியை .
சலனமற்று மிதக்கும்
இருளை .
அதன் ஒலி
எனது உறக்கத்தில் எதிரொலிக்கிறது .
பிறகு, பூனையின் ஒலி
எனது உறக்கமாக ஆகிப்போனது .
இப்படித்தான் எனது
உறக்கத்திற்கு
தொல்காப்பியனின் பூனை என்று
பெயர் வந்தது .
- கார்த்திக் நேத்தா
