மஞ்சள் பையோடு
பூக்கட்டுகிற மாரி
புதியமுத்து தாத்தாவை
கடைசியாய்ப் பார்த்தது
மானாமதுரை ஸ்டேஷனில்.
வீட்டை திறந்தே போட்டுவிட்டு
கிளம்பிப் போனது உச்சிக்கால பூஜை
வேளையில்.
பூச்சுகரண்டி கொண்டு
சகட்டுமேனிக்கு எல்லோரையும்
கொத்தித் திரிந்த மஞ்சமலை கொத்தனை
கோபுர வேலைக்கெனச் சொல்லி
ஏமாற்றி விட்டு வந்தது
ஏர்வாடி தர்காவில்.
வெற்றிலைக்கொடி சம்முகம் மாமா
வடக்குப் பக்கம் ஒரு பெண்ணின் ஆதரவில்
இருப்பதாகச் சொன்ன உடுக்கைக்காரனுக்கு
முன்னால் பதினோரு ரூபாய் காணிக்கை
வைத்து அழுகிற குழந்தையை
அணைத்தவாறு கண்ணீர் பெருக்குகிறாள்
ஜமுனா அத்தை.
ஒருபோதும் திரும்ப முடியாதவர்களின்
கதையை கவிதையில் எழுதிக் கிழிக்கிற
எனக்கு 42 வயதில் சந்நியாச பிராப்தம்
நிச்சயமென ஜோஸ்யக்காரன் சொன்னதாகக்
கலங்கி கோயில் கோயிலாக ஏறி
தீபம் போட்டுக்கொண்டிருக்கிறாள்
இருளாயி அப்பத்தா.
-முத்துப்பாண்டி
