பிரிவுத் துயர்
காதல்
ஒரு பிணத்தைப் போல
நம் முன் கிடக்கிறது .
கொடுவாளில்
காய்ந்து கொண்டிருக்கும்
கோழி ரத்தமென
உன் முகம் உறைய ஆரம்பிக்கிறது .
நம் காதலை நினைவுபடுத்தும்
புகைப்படங்களை தீ இட்டு எரித்தாய்
உன் கை ரேகைகளில் ஓடிக்கொண்டிருக்கும்
என் உதட்டுச் சூட்டை
என்ன செய்து விட முடியும் உன்னால் ?
உன் எச்சில்களில் ஊறிவிட்ட
என் பெயரை ஏது செய்யும் உன்
புறக்கணிப்பு ?
உன் காமத்தை
உனக்கு அறிமுகம் செய்து வைத்த
என் பார்வையை எளிதில்
மறந்து விட முடியுமா உன்னால் ?
என் முத்தம் கதறும் உதடுகளை
எந்த நாக்கைக் கொண்டு
ஈரப்படுத்திக் கொள்வாய் ?
மழைக்காலம் வந்தால்
ஏலக்காய் டீயோடு
என் நினைவும் வந்தே தீரும் .
மெடிக்கல் கடையை கடக்கும் போது
நேப்கின் வாங்கிக் கொண்டிருக்கும் நான்
தெரிந்தே தீருவேன் .
உன் அதிகபட்ச சந்தோசத்தின் போதும்
அளவு கடந்த வலியின் போதும்
என்னை நினைக்காமல் உன்னால்
இருக்கவே முடியாது .
உனக்குத் தர என்னிடம் இருப்பது
நீ தந்த கண்ணீர்த் துளிகளும்
நீ விரும்பிய விந்துத் துளிகளும்
மாத்திரமே .
- கார்த்திக் நேத்தா
