பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 19, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 4

சுக்கிலத் தியானம்


வெளிச்சம்
ஒரு குரலைப் போல 
என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறது .



எனக்கெதிரே 
கிடக்கும்.
இலையின் மௌனம்
யாரின் சீற்றம் ?  அல்லது
அதன் சரசரப்பு
எதன் மௌனம் ?


கண்ணாடி முன் நீளும்
பெருவெளியில் 
நான் தான் யார் ?


மாதவிடாய் அந்தியை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சிரித்தபடி கடக்கிறான்
பழக்கமான பைத்தியக்காரன்
அவன் ஏன் என்னைப்பார்த்தால்
மட்டும் சிரிக்கிறான் ?


காயப்போட்ட காயம்
மீண்டும் உடுத்தத்தானே
மனமே ?


நதியாக இருந்த போது
வேண்டிய கரைகளை
காற்றான பிறகு தருவதேன் ?


நீரில் ஒளித்துவைத்த நீர் நான்
என்னைக் காண யாரைக் கெஞ்சுவாய்?


கிணற்றில் காயப்போட்ட நிலவை
வெறிக்கும் மீன் போல கடவுள்
என்னை வியப்பான் .


ஊற்றைப் போல
எளிமையாய் இருக்கும் என்னிடம்
வெளிச்சம் மட்டுமே
ஒரு குரலைப் போல
பேசிக்கொண்டிருக்க முடியும்


 - கார்த்திக் நேத்தா 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com