பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

July 5, 2010

கார்த்திக் நேத்தா கவிதைகள் - 2

நான் கார்த்திக் நேத்தா. சேலம் மாவட்டம், சின்னனூர் கிராமம்.  திரைத் துறையில் பாடலாசிரியராக வளர்ந்து வருகிறேன்.

இவருடைய கவிதைகள் காட்சியில் தொடராய் வெளிவருகின்றன.

இவரின் ஏனையக் கவிதைகளுக்கு இங்கே சொடுக்கவும்.








1

மன மைதுனமே
ஞானமடி பைந்தொடீ .
தன்மை கரைந்து
முன்னிலை தேங்கிவிடும் விஷயமடி .
குழந்தை பொரிக்கும்
எச்சில் முட்டைக்குள்
நிகழ்ந்தடங்கும் பேரியக்கம் .
தன் குஞ்சியை நோண்டும்
குழந்தையின் அக்கண சூன்யம்
நீர் அதிர விழும் ஒளியின் சூட்சுமம்
அது காண்  தோழி .
தத்வமஸி அப்ரமேயம் .


2

முதல் முறையாய்
தான் மூத்திரம் விடுவதை
பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
கடவுளாகி நிமிர்கிறேன் அம்மா .

3

வரைந்த கோலத்தின் நடுவே
பூ வைக்க வேண்டி ,
பறிக்க போய் வந்த  இடைவேளையில்
சுடச்சுட மலம் கழித்து போயிருக்கிறது
நாய் .
இருக்கட்டுமே ,
காய்ந்து வாடி விடப்போகும்
அந்தப்பூவும் .

4

நாசமாய்ப் போக
பாம்பும் ஏவாளும்

அந்தத் தோட்டத்தில்
ஒரு பூ கூடவா
இருந்திருக்காது
ஆதாம் பறிக்க ?

5

பாட்டி வடை சுட்டக் கதை
வேண்டாம் அம்மா
என் ஈழத்தோழி எதிரியை
சுட்ட கதை சொல் .

 - கார்த்திக் நேத்தா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com