அறிமுகம்
இயக்குநர் சீனுராமசாமி, பூர்வீகம் மதுரை. படித்தது மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி. மணம் புரிந்திருப்பது தமிழாசிரியை. மகள் பெயர் தியானா செந்தமிழ். முதல் திரைப்படம் கூடல் நகர். “ தென்மேற்கு பருவக்காற்று” கூடியவிரைவில் திரையரங்குகளில் வீச இருக்கிறது. முதல் கவிதை நூல் “ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்”. காட்சியில் இவரது கவிதைகள் தொடராக வெளிவருகிறது.
1.
பகல் சூரியன்.
கால் நனைத்த நிமிடத்தில்
நடுக்கமுற்றது
அப்பொழுது அது
வெளிர்மஞ்சள் நிறமாயிருந்தது.
பின் பலாச்சுளை உதடுகளை
பொட்டல் வெளியில்
கவ்விய தருணத்தில்
இடையே நழுவியது
அப்பொழுது அது கருஞ்சிவப்பில்
பழுத்திருந்தது.
அவள் கைகளைப் பற்றிக் கொண்டு
தேவாலய வெளி பிரகாரத்துக்குள்
திரிந்த பொழுது
அது கோபுரபின் பகுதியில்
மறைந்திருந்தது.
அவள் அவனோடு
முயங்கிய பகலில்
ஜன்னலோரத்தில் அது
இறந்து கிடந்தது.
- சீனுராமசாமி

