பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 3, 2010

இரு கவிதை - முத்துப்பாண்டி

அறிமுகம்:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர். சொந்த ஊர் மதுரை. தற்பொழுது சென்னையில் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரின் கவிதைகள் வருமாறு..










காட்டுப் பூ

கொடுங்கனவில் நடுங்கி
உறங்கும் உன்னுடலை
இழுத்தணைக்கிறேன் இந்த நடுநிசியில்.
பாலையெனச் சுடும்உன் உடல்வெளியில்
கனவின் இரகசியங்களைத் தேடுமென் கைகள்.
வரைபடம் ஏதுமற்று திகைத்து
நிற்கும் என் வழியெங்கும்
கண்மூடிப் பிரார்த்திக்கும்
உன்னுரு பிம்பங்கள்.
தொடத்தொடக் கலைகிறாய் கானல்அலையில்.
சிறுசிப்பியென மூடித் திறக்கும்
உன் இதழ்களில் பதிக்கிறேன்
என் அன்பின் ஈரத்தை.
சொல்கொணரா நேசம்
மழைபொழியும் வனமெங்கும் பூக்க
அழைத்துச் செல்லுமென் கைப்பிடித்து வா.
காட்டுப் பூவென விரியும்
நம் அறையின் காலை.

 அருவி

எங்கிருந்தோ திரண்டுவந்து
கொட்டுவதே நல்ல தியானமெனக்
கொட்டுகிறது மலையருவி.
நீ
நான்
மனநலக் காப்பகத்தின்
அந்தக் குழந்தைகள்
குளிக்கிறோம்.
அருவி ஒருபோதும்
அறிவதில்லை
நமது பேரானந்தத்தையும்,பெருந்துக்கத்தையும்.

                             - முத்துப்பாண்டி



தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com