பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 28, 2010

இவள்பாரதி கவிதைகள்-10

இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது

தேவ மௌனம்:
  

நீ வெற்றிலைக் காம்பை 
கிள்ளி வீசினாய்..
நான் பாக்கின் 
துகளை தூவினேன்.. 
சுண்ணாம்பு கிடந்த இடத்தில் 
விழுந்து சிவந்திருந்தது 
காதல்..

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
 
உன் ஒவ்வொரு
மௌனத்திற்குள்ளும் 
சொற்களை நட்டு வைக்கிறேன்.. 
என் ஒவ்வொரு 
வார்த்தையிலும் 
ஒரு மௌனத்தை பறித்து செல்கிறாய்.. 

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

முதலில்
ஒரு உந்துதலை தருகிறது 
உன் ஜீவ சொற்கள்.. 
பின்னர் 
ஒரு உறுத்தலை தருகிறது 
உன் தேவ மௌனம்..

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

சலிப்பற்ற
என் நேசமும் 
சலிப்புற்ற 
உன் வாதமும் 
கைகோர்த்து பயணிக்கையில் 
எதிர் நின்று 
குதூகலமிடுகிறது
ஒரு சோகமான கவிதை

 - இவள்பாரதி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com